1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (20:31 IST)

ஓடும் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்ததால் பரபரப்பு

அரசு பேருந்துகள் பல அபாயகரமாக இருப்பதாக ஏற்கனவே பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகளில் பயணம் செய்யும்போது பயணிகள் உயிரை கையில் பிடித்து கொண்டுதான் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
 
இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு செல்லும் அரசு பேருந்து ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த பேருந்தின் மேற்கூரை காற்றில் பறந்தது. மேற்கூரையின் முக்கால்வாசி பகுதி பெயர்ந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். உடனே ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி மீண்டும் மேற்கூரையை பயணிகள் துணையுடன் அப்புறப்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த பகுதியில் காற்று பலமாக அடித்ததால் அவர்களின் முயற்சி வீணானது 
 
அதன்பின்னர் பயணிகள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்கப்படாததே இவ்வித பிரச்சனைக்கு காரணம் என்றும், அரசு பேருந்துகள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பயணிகளும் சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை அரசு பேருந்து நிர்வாகம் ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்