வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2022 (15:03 IST)

பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் எம்பி.,

மழைக்கால விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் முன்னேச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென  தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும், அந்த மழை நவம்பர் 4 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில்,  மழைக்கால விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் முன்னேச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளதாவது:

அரசவடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு பள்ளிகளில் மழைக்கால விபத்துகள், பாதிப்புகளை தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதற்கான நிதி வழங்கப்படவில்லை!  சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களின் சொந்த பணத்தைக் கொண்டு இந்த பணிகளை செய்கிறார்கள். அவ்வாறு செய்யப்படாத பள்ளிகளில் மழைக்காலத்தில் ஏதேனும் விபத்துகள் நடந்தால்  ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆபத்துகள் ஏற்படக்கூடும். அது தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும்,   மாணவச் செல்வங்களின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டக் கூடாது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்படி அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை பள்ளிக்கல்வித்துறை  உடனடியாக  விடுவிக்க வேண்டும்’.’என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj