1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : புதன், 5 பிப்ரவரி 2020 (13:55 IST)

பிரீசரில் வைக்கப்படும் இறைச்சியும் கொரோனாவுக்கு காரணம்; திருப்பூர் மாணவர் அதிர்ச்சி தகவல்

கோப்புப்படம்

இறைச்சியை பிரீசரில் வைத்து விற்பனை செய்தாலும் கொரோனா வைரஸ் பரவவியிருக்கலாம் என சீனாவில் படிக்கும் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் கூறியுள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், 490க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியா, தைவான், ஹாங்காங், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மேலும் ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஒருவரும், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி சீனாவில் ஜிங்ஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலும் 3 ஆம் ஆண்டு மாணவர் அபிஷேக் திருப்பூர் வந்தார். அப்போது, “கொரோனா வைரஸ் இறைச்சி மார்க்கெட்டில் இருந்து பரவி உள்ளது. சீன மக்கள் அன்றாட தங்களது உணவில் இறைச்சியை அதிகம் பயன்படுத்துகின்றனர். வாரக்கணக்கில் இறைச்சியை பிரீசரில் வைத்து விற்பதாலும் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம்” என கூறினார்.

மேலும் “சீனாவிலிருந்து டெல்லி வருபவர்கள் முழுமையான பரிசோதனைக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சீனாவில் இருந்து வந்த அனைவரும் சுகாதாரத்துறையின் தொடர் கண்காணிப்பில் தான் உள்ளனர்” எனவும் கூறியுள்ளார்.

அபிஷேக், திருப்பூரை அடுத்துள்ள கணக்கன் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.