1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (19:18 IST)

நல்ல வேளை நடிகர் ரஜினிகாந்த் முதல்வராகவில்லை- திருமாவளவன்

நடிகர்  ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்திருந்தால், யோகி ஆட்சி போல்தான் இருந்திருக்கும்’’ என்று  திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் வசிப்பவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகன் சின்னத்துரையும்,14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்  அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில்  இருந்தபோது இரவு  3 பேர் கொண்ட கும்பல் ஒன்று  வீட்டிற்குள் அத்துமீறி  நுழைந்து இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. அருகில் இருந்தோர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு, அரசியல் தலைவர்கள்,  சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாங்குநேரியில் நடந்த  இந்த சம்பவத்தை  கண்டித்து திருமாவளவன் எம்பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய திருமாவளவன், ‘’ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் நுழைந்து ஒருவரை தாக்கிவிட்டு, எந்தக் காயமுமின்றி தப்பி செல்ல முடியும் நிகழ்வு 21 ஆம்  நூற்றாண்டில் நடைபெறுகிறது. இதை மனித நேயமுள்ளவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது‘’ என்று தெரிவித்தார்.

நேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்த சம்பவம் பேசு பொருளாகியுள்ள  நிலையில், இதைக் குறிப்பிட்டு பேசிய திருமாவளவன், ‘’பூனைக்குட்டி வெளியே வந்திருக்கிறது.  நடிகர்  ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்திருந்தால், யோகி ஆட்சி போல்தான் இருந்திருக்கும்’’ என்று விமர்சித்துள்ளார்.