1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (09:54 IST)

பிடிபட்டது மக்னா யானை; வனப்பகுதியில் விட காரமடை மக்கள் எதிர்ப்பு!

Elephant
கோவையில் விவசாய பகுதிகளில் ஆட்டம் காட்டி வந்த ஒற்றை காட்டு யானை பிடிபட்ட நிலையில் அதை வனப்பகுதியில் விடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வனப்பகுதிகள் என்பதால் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சிலசமயம் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்து விடுவதும், பின்னர் அவை காட்டுக்குள் விரட்டியடிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. சமீப சில காலமாக மக்னா யானை ஒன்று விவசாய பகுதிகளில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. அதை காட்டுக்குள் விரட்ட முயன்றபோதும் அது வெவ்வேறு கிராமங்களுக்கு சென்று விவசாய நிலங்களை நாசப்படுத்தி வந்தது. இதனால் மக்னா யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் 3 கும்கி யானைகளை வரவழைத்து பெரும் முயற்சி செய்து மக்னா யானையை கட்டுக்குள் கொண்டு வந்து வனத்துறையினர் பிடித்துள்ளனர். ஆனால் இந்த யானையை காட்டுக்குள் விடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. காடமடை வனப்பகுதியில் யானையை விட வனத்துறை திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் யானை மேட்டுப்பாளையம் மரக்கிடங்கு செக்போஸ்ட்டில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. மக்கள் எதிர்ப்பால் யானையை டாப் ஸ்லிப் பகுதியில் விட்டுவிடலாம் என வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K