1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2017 (13:30 IST)

சசிகலா ஓவர் ; அடுத்து தினகரன் - திட்டம் தீட்டும் எடப்பாடி?

சசிகலா ஓவர் ; அடுத்து தினகரன் - திட்டம் தீட்டும் எடப்பாடி?
தற்காலிக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கம் செய்து விட்டபின், அடுத்து தினகரன் மீது தனது பார்வையை எடப்பாடி பழனிச்சாமி திருப்பியுள்ளார் என செய்திகள் உலா வருகிறது.


 

 
அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கி விட்டு, கட்சி மற்றும் ஆட்சியை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர நினைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, சில மாதங்களுக்கு முன்பு தினகரனை கட்சியில் இருந்து நீக்கியது. நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
 
அதோடு, கட்சியின் அனைத்து முக்கிய அதிகாரங்களும், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோருக்கு வழங்கி ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. அதேபோல், இனிமேல் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டு விட்டது.

சசிகலா ஓவர் ; அடுத்து தினகரன் - திட்டம் தீட்டும் எடப்பாடி?

 

 
இதனால் கொதித்தெழுந்த டிடிவி தினகரன் ‘இந்த ஆட்சியை அகற்றுவோம்’ எனப் பேச துவங்கியுள்ளார். அதே நேரம், ‘முடிந்தால் அவர் அதை செய்து பார்க்கட்டும்’ என எடப்பாடியும் மார்பு தட்டுகிறார்.
 
இந்நிலையில், சசிகலா கதை முடிந்துவிட்டது. அடுத்தது நமது இலக்கு தினகரன்தான் என ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பு களம் இறங்கியுள்ளது. அதன் விளைவாக, தினகரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் பணிகளை முதல்வர் பழனிச்சாமி முடுக்கி விட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. 
 
தினகரன் மற்றும் அவருக்கு நெருக்கமானோர் மீது உள்ள வழக்குகள் ஆகியவை மீண்டும் தூசி தட்டப்பட இருக்கின்றனவாம். அதற்கான தகவல்களை திரட்ட உளவுத்துறை அதிகாரிகளுக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டு, அந்த அறிக்கை தற்போது முதல்வரின் மேசையின் மீது இருக்கிறதாம். 
 
எனவே, 19 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டிக்கொண்டிக்கும் தினகரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் விரைவில் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.