வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 24 அக்டோபர் 2019 (14:28 IST)

”முரசொலி” மீது அரசு நடவடிக்கை எடுக்கும்”.. சீறும் எடப்பாடி

“முரசொலி” அலுவலக கட்டிடம் பஞ்சமி நிலமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் தனுஷ் நடித்த “அசுரன்” திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின், ”பஞ்சமி நிலம் குறித்து அசுரன் திரைப்படம் பேசியுள்ளது. இந்த திரைப்பட குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார். இதை தொடர்ந்து அவரது கருத்துக்கு எதிர் கருத்தாக பாமக நிறுவனர் ராமதாஸ் “ முரசொலி கட்டிடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது” தான் என கூறினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக முக ஸ்டாலின், “முரசொலி பத்திரத்தின் பட்டாவை பதிவிட்டு, முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலம் அல்ல” என கூறினார். இதையடுத்து, ராமதாஸ் முரசொலி கட்டிடத்தின் மூலப்பத்திரத்தை காட்டுமாறு ஸ்டாலினை குறிப்பிட்டு கூறினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “நான் மூலப்பத்திரத்தை காண்பிக்கிறேன், ஒரு வேளை முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலமாக இருந்தால் நான் அரசியலை விட்டு விலகிக்கொள்கிறேன், ஆனால் பஞ்சமி நிலமாக இல்லை என்றால், ராமதாஸும் அவரது மகனும் அரசியலை விட்டு விலகிவிடவேண்டும்” என கூறினார்.


இது போன்று இருவருக்கும் வாக்கு வாதம் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி முகம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “இது உண்மைக்கு கிடைத்த வெற்றி” என கூறினார்.

அதனை தொடர்ந்து, பஞ்சமி நிலம் குறித்தான கேள்வி எழுந்தபோது, முரசொலி அலுவலக கட்டிடம் உள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்” என கூறியுள்ளார்.