1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (10:24 IST)

ஆளுநரை திரும்பப் பெறு - சென்னையில் திமுகவினர் போராட்டம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை அடிபட்டிருப்பதால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, நிர்மலா தேவியை யாரென்றே தெரியாது எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ சுப்பிரமணியன் தலைமையில் இன்று சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடந்தது. கிண்டியில் உள்ள ஆளுநர்  மாளிகையை நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணி “ஆளுநர் பன்வாரிலால் நியமிக்கப்பட்டது முதல் தமிழகத்தில் பெண்கள் சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருகிறார். ஆய்வு என்ற பெயரில் மாநில உரிமைகளை கையில் எடுத்ததோடு, குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை எட்டிப் பார்த்தார். தற்போது ஆளுநருக்கு தான் மிகவும் நெருக்கமானவர் என நிர்மலா தேவி கூறியுள்ளார். ஆனால், இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என அவரே குழு வைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு பெண் செய்தியாளரின் கன்னத்தில் கை வைத்து தட்டியுள்ளார். இவர், தமிழக பெண்களின் கற்புக்கு கேள்விக்குறியாக இருக்கிறார். இது போன்ற ஆளுநர் தேவையில்லை. எனவேதான், அவரை திரும்ப பெற வேண்டுமென நாங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்துகிறோம்” என அவர் கூறினார்.
 
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.