1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜூலை 2024 (14:07 IST)

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

BJP Meeting
தி.மு.க., ஆட்சியில் சாமானிய மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் மாநிலத்தில் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடுகிறது என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
 
சென்னை வானகரத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில்,  மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கொண்டனர். 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மேகதாது, முல்லை பெரியாறு அணை, சிலந்தி ஆறு, பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க தவறிய தி.மு.க.விற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 
தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் சக்தியை இழந்து விட்ட தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் திருமணம் நிறைவேற்றப்பட்டன. மேலும் நாடாளுமன்றத்தில் தமிழர்களின் கலாசார அடையாளமான செங்கோலை அவமதித்ததற்கும், மாநிலக் கல்வி கொள்கை குறித்த முன்னாள் நீதிபதி சந்துரு அறிக்கைக்கும் கண்டனம் ஆகிய 7 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 
Annamalai
இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,  தமிழகத்தில் பாஜக மெல்ல மெல்ல வளர்ந்து நிற்கிறது என்றார். மேலும் பாஜகவினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என்றும் தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு சட்டம் ஒழுங்கு சரிந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். 
 
மாநிலத்தில் எந்த கட்சியினர் மீதும் இல்லாத அடக்குமுறை பாஜக மீது ஏவப்படுகிறது என்று அண்ணாமலை புகார் தெரிவித்தார்.பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தி.மு.க., ஆட்சியில் சாமானிய மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் அவர் விமர்சித்தார்.

 
மாநிலத்தில் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடுகிறது என தெரிவித்த அண்ணாமலை, இது குறித்து பேசவும், உண்மையை சொல்லவும், எதிர்க்கவும் யாருக்கும் தைரியம் இல்லை இன்றும் மீறி எதிர்த்தால், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.