1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (08:14 IST)

கூட்டணிக்கு அச்சாரமிட்ட கலைஞர் சிலை திறப்பு விழா

நேற்று சென்னையில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்யும் விதமாகப் பேசியுள்ளார்.

இன்னும் 6 மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அதனால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் ஆரம்பித்து விட்டன. பாஜாக வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டுமென காங்கிரஸ் நாடு முழுவதும் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக வின் செல்வாக்குப் பெருமளவில் குறைந்துள்ளதைத் தெளிவாகக் காட்டியுள்ளது. இந்த முடிவுகளால் தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் என நம்பப்பட்ட ரஜினி, கமல் கூட பாஜக வின் தோலிவியை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர். இதனால் பாஜக அணியில் இருந்து விலகவே அனைவரும் விரும்புவதாகத் தெரிகிறது.

ஏற்கனவே தென் இந்தியாவில் கர்நாடகம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாக்கு வங்கி இல்லை. இப்போது ஆதிக்கம் செலுத்தி வந்த வட இந்தியாவிலும் செல்வாக்கு குறைந்து வருகிறது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் பெரிதும் விரும்புகிறது. அதனால் தன் தலைமையின் கீழ் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்க ராகுல் முயன்று வருகிறார்.

இதற்கு மாயாவதி, மம்தா பானர்ஜி போன்ற ஒரு சில மாநிலத் தலைவர்களிடம் இருந்து போதுமான ஆதரவு இல்லையென்றாலும் பெருவாரியான மாநிலத் தலைவர்கள் காங்கிரஸ் தலைமையின் கீழ் இணைய விரும்புகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்து வந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தது.

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பாஜக வுக்கு எதிராக தீவிரமாக செயலாற்றி வருகிறார். அவரும் காங்கிரஸோடு இணைய சம்மதித்து தெலங்கானா தேர்தலிலேயே கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டார்.

இந்நிலையில் நேற்று கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு வந்த ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை வரவேற்றுப் பேசிய ஸ்டாலின் ராகுலை பிரதமராக முன்மொழிந்துள்ளதால் காங்கிரஸ் தலைமையிலானக் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.