1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2024 (10:35 IST)

பிரதமர் மோடி மீது உள்ள பயத்தால் திமுக கதறுகிறது! – பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு ஓபன் டாக்!

Khusboo
திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, பிரதமர் மோடி குறித்து பேசியதற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பூ பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் அதேசமயம் எதிர்க்கட்சிகளை தாக்கி பேசியும் வருகின்றன. சமீபத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், இந்த தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடி ஆயுள் தண்டனை பெறுவார் என்றும், பாஜக பல மாநிலங்களில் 400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை விலைக்கொடுத்து வாங்கியது என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ “விலை கொடுத்து வாங்கி பழகியவர்களுக்கு அந்த எண்ணம் தான் வரும். இன்று ஜெயிலில் இருக்கும் செந்தில்பாலாஜி உள்பட பல அதிமுகவினர் திமுகவில் இணைந்தார்கள். அவர்களை எவ்வளவு விலைக்கொடுத்து திமுக வாங்கியது என்பதையும் வெளியிட்டால் நல்லது”என்று விமர்சித்துள்ளார்.


மேலும் “மற்றவர்கள் சொத்துக்கணக்கை கேட்க ஆசைப்படும் திமுகவினர் முதலில் அவர்களது சொத்துக்கணக்கை எண்ணி பார்க்க வேண்டும். லாலுபிரசாத் யாதவ் ஊழல் செய்து சிறை தண்டனை பெற்றவர்.. அப்படி ஊழல் செய்தவர்களோடு கூட்டணி அமைத்து மக்களிடம் ஓட்டு கேட்க போகிறார்கள். ஊழலில் ஊறிப்போன திமுக கட்சியினர் பாஜகவை பார்த்து விரல் நீட்ட தகுதி அற்றது.

ஆனால் பிரதமர் மோடி ஊழலை ஒழிக்க போராடுகிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் நிலைமை என்னவாகுமோ என்ற பயத்தில் திமுகவினர் கதறுகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க திமுகவினருக்கு பயமும் அதிகரித்து வருகிறது” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K