1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMDK protest for cauvery issue today

காவிரி விவகாரம்: சென்னையில் பறக்கும் ரயிலை மறித்த 200 தேமுதிகவினர் கைது

dmdk
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கடந்த சில நாட்களாக போராடி வருகிறது. குறிப்பாக திமுக தொடர்ச்சியான போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் காவிரி விவகாரம் குறித்த முக்கிய வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என தமிழக மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இதுவரை காவிரி விவகாரத்தில் அறிக்கையின்மூலம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக இன்று போராட்டக்களத்தில் இறங்கியுள்ளது. சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் பறக்கும் ரயிலை தேமுதிக தொண்டர்கள் மறித்தனர்.

இந்த போராட்டம் குறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடனடியாக போராட்டம் செய்தவர்களை கைது செய்து ரயில் போக்குவரத்தை சீர்செய்தனர். சுமார் 200 தேமுதிகவினர் காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற இன்னும் பல போராட்டங்களை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தேமுதிக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு