1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (21:43 IST)

திருட்டு ரயிலேறி வந்த பாரம்பரியத்திலிருந்து வந்த ஸ்டாலின்: தினகரன் பதிலடி

இன்று வெளிவந்த முரசொலியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்து வந்த கட்டுரைக்கு டிடிவி தினகரன் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தினகரன் கூறியிருப்பதாவது:

கட்சியை, மக்களைக்காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றைய நிலையை ஆராய்ந்து பார், அவன் தியாகியா அல்லது தகுதியைத் தாண்டிய செல்வந்தனா என்பது புரியும். அதிலும் தன் குடும்பம்,பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அவன் சுயநலப் புலிதான் என்றார் பெரியார்.

திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பரியத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப் புலி!

லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவான பல நூறு கோடி மதிப்புள்ள முரசொலி அறக்கட்டளைக்கு தனது மகனை அறங்காவலராக நியமித்த யோக்கியர் ஸ்டாலினைப் பற்றித்தான் 55 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இப்படிச் சொன்னார் போலும்.

லட்சம் கோடி மதிப்பிலான 2ஜி ஊழல் வழக்கில் தனது தங்கையை, தாயை சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த இந்த சுயநலப்புலிதான் இன்று மற்றவர்களின் தரம் பற்றி பேசுகிறது.

பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் அரா மீனைப் போல, தேர்தலுக்கான கூட்டணிக்கு காங்கிரஸ்; தேர்தலுக்குப் பிறகான கூட்டணிக்கு பி.ஜே.பி. என வேஷமிடும் அரா மீன் ஸ்டாலின், அயிரை மீனைப் பார்த்து பயந்து பதுங்குவது ஏன்..?

இவ்வாறு டிடிவி தினகரன் கூறியிருப்பதால் வரும் தேர்தலில் திமுக, தினகரன் அணிகளுக்கு இடையேதான் உண்மையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.