1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (12:15 IST)

டபுள் டிகிரி, டாக்டர் படிச்சவங்கதான் வேட்பாளர்.. சீமான் குடுத்த ட்விஸ்ட்டால் அதிர்ச்சியில் தம்பி, தங்கைகள்!

Seeman
மக்களவை தேர்தலுக்காக அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒரு சிக்கலாக இருந்து வரும் நிலையில், வேட்பாளர்கள் தேர்விலும் குளறுபடிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



கடந்த மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் திமுக, அதிமுகவிற்கு பிறகு அதிக ஓட்டுகள் பெற்ற மூன்றாவது கட்சியாக இருந்தது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில் தற்போது நா.த.கவின் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் சின்னம் கிடைப்பதில் பெரும் பிரச்சினைகளை நா.த.க சந்தித்து வருகிறது.

அதேசமயம் கட்சியில் வேட்பாளர்கள் தேர்விலும் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிகமான பெண் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி நிறுத்தியது. இந்நிலையில் இந்த முறை பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள், டாக்டர் பணியில் இருப்பவர்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளராக போட்டியிட முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

சில தொகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை நீக்கிவிட்டு புதிதாக வேறு வேட்பாளர்களை தலைமை அறிவிப்பதால் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள். முதலில் தென்காசி நா.த.க வேட்பாளராக முதலில் டாக்டர்.கயிலைராஜனை அறிவித்தார்கள். ஆனால் அவர் முன்னதாக பாஜகவில் இருந்தவர் என தெரிய வந்ததை தொடர்ந்து அவரை நீக்கிவிட்டு இசை மதிவாணன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது மீண்டும் இசை மதிவாணன் நீக்கப்பட்டு கயிலை ராஜனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


அதுபோல ஸ்ரீபெரும்புதூரில் ஆர்.கே.சுரேஷின் அண்ணன் மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு பின் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மருத்துவர் ரவிச்சந்திரன் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

அதுபோல மேலும் சில தொகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பெண் வேட்பாளர்கள், இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களை நீக்கிவிட்டு முடிந்தளவு டாக்டர்கள் அல்லது பட்டமேற்படிப்பு, பட்டய படிப்பு முடித்தவர்களை வேட்பாளர்களாக அறிவிக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சிக்காக அல்லும் பகலும் உழைத்த பலருக்கு சீட்டுகள் தராமல் டாக்டர் என்பதாலேயே புதிதாக வந்தவர்களுக்கு எல்லாம் சீட்டை வாரி வழங்குவதாக புலம்பிக் கொள்கிறார்களாம் நாதக தம்பிகள், தங்கைகள்.

Edit by Prasanth.K