1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (09:41 IST)

கடை ஊழியரை கொலை செய்த ஜோதிடர்? கோவில் வளாகத்தில் பிணம்! – கடலூரில் பரபரப்பு!

கடலூரில் மளிகைக்கடை ஊழியர் ஒருவரை பிரபல ஜோதிடர் கொன்று கோவில் வளாகத்தில் புதைத்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் கண்ணதாசன். கடந்த 12ம் தேதி முதலாக கண்ணதாசன் மாயமான நிலையில் புகார் அளிக்கப்பட்டதால் போலீஸார் கண்ணதாசனை தேடி வந்தனர். இந்நிலையில் லிங்கா ரெட்டிப்பாளையம் அருகே ஒரு கோவில் வளாகத்தில் கண்ணதாசன் கொன்று புதைக்கப்பட்டது போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.

பகலில் தோண்டி எடுத்தால் பிரச்சினை எழலாம் என்பதால் இரவோடு இரவாக சடலத்தை தோண்டி எடுத்த போலீஸார் அதை உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர். கண்ணதாசன் கொல்லப்பட்ட வழக்கில் அப்பகுதியில் பிரபல ஜோசியராக வலம் வரும் கோபிநாத் என்பவருக்கு தொடர்பிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி ஜோதிடர் கோபிநாத் மற்றும் அவரது நண்பர் திருப்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இறந்த கண்ணதாசனோடு ரகசிய உறவில் இருந்த மஞ்சுளா என்பவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.