1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (12:27 IST)

இன்னைக்கு நான்.. நாளைக்கு நீங்களும் முதல்வராகலாம்! – எடப்பாடியார் உற்சாக பேச்சு!

அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தொண்டர்களை முதல்வராக கொண்ட ஒரே கட்சி அதிமுக என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தேர்தல் பரப்புரையை தொடங்கும் பொதுக்கூட்டம் சென்னை ஒய்,எம்சிஏ மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அமைத்துள்ள ஒரே கட்சி அதிமுக. தற்போது எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்ஜிஆர் பெயர் உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் அதிமுக தலைமைகளுக்கு வாரிசு கிடையாது. அவர்களுக்கு நாம்தான் வாரிசு. பிரிந்தபின் மீண்டும் இணைந்த ஒரே கட்சி அதிமுக. அதை நிகழ்த்திக்காட்டியவர் ஜெயலலிதா” என கூறியுள்ளார்.

மேலும் “சமீப காலமாக அதிமுகவை சில புல்லுருவிகள் வீழ்த்த நினைத்தார்கள். ஆனால் அவர்களது திட்டம் தவிடுபொடியாகி விட்டது. இன்று நான் முதல்வராக இருக்கலாம். நாளை ஓபிஎஸ் முதல்வராக இருக்கலாம். பிறகு உங்களில் யாராவது ஒருவர் கூட முதல்வராக வரலாம். தமிழகத்தில் ஒரு தொண்டன் முதல்வராவது அதிமுகவில் மட்டுமே சாத்தியம்” என கூறியுள்ளார்.