1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (09:27 IST)

பசியால் அழுத சிறுமி! – உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர்!

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உணவு கிடைக்காமல் பட்டினி கிடப்பதாக சிறுமி ஒருவர் அழுத நிலையில் உடனடியாக உதவி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் தமிழக முதல்வர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள அதே சமயம் வெளியூர்களில் வேலைக்கு சென்றவர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்ப செல்ல முடியாத சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் விருதுநகர் பகுதியில் கூலி வேலை செய்யும் ஒருவர் ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாததால் உணவுக்கே பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அரிசியும் குறைவான அளவே இருப்பதால் ஒருவேளை மட்டுமே உணவு கிடைப்பதாக தொழிலாளியின் மகள் அழுவதை நபர் ஒருவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவர்களது முகவரி மற்றும் தகவல்களை கேட்டுள்ள முதல்வர் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதை கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி என்றும் ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

இதற்கு முன்பும் புலம்பெயர் தொழிலாளிகளின் உணவு பற்றாக்குறை, இராணுவ வீரரின் தாய்க்கு உதவியது என பலத்தரப்பட்ட கோரிக்கைகளையும் ட்விட்டர் மூலம் பெற்று உடனடி நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.