1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:53 IST)

சென்னையில் சரிந்து விழுந்த கட்டிடம்; நூலிழையில் தப்பிய குடும்பம்!

சென்னையில் ராயப்பேட்டையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி அருகே 50 ஆண்டுகளுக்கும் பழமையான 5 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கு 13 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் அந்த கட்டிடத்தை வாங்கிய இம்ரான் என்பவர் அந்த கட்டிடத்தில் வசித்தவர்களை காலி செய்து அனுப்பியுள்ளார். இந்நிலையில் ராஜியா பேகம் என்பவர் மட்டும் வீட்டை சொந்தம் கொண்டாடி வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் ராஜியா பேகம் குடும்பத்தினருடன் அங்கு வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டின் ஒரு பக்க சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் உஷாரான ராஜியா குடும்பத்தார் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு மணி நேரத்தில் அந்த 5 அடுக்கு மாடி வீடு சரிந்து விழுந்துள்ளது. அருகே யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.