வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (12:25 IST)

லம்பாய் சிக்கிய 2000 ரூபாய் நோட்டு: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குபதிவு!

நாங்குநேரியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழக சட்டமன்ற தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 அன்று இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இரு தொகுதிகளுகும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. 
 
இந்நிலையில் நாங்குநேரி பகுதிகளில் சட்டவிரோதமாக ஓட்டுக்கு பணம் அளிக்கப்படுவதாக புகார் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆதாரம் இல்லாததால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட அம்பலம் பகுதியில் ஒரு வீட்டில் ஓட்டுக்கு கொடுப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக தெரியவந்தது. 
 
இதை அறிந்ததும் அங்கு விரைந்த பொதுமக்கள் பணம் இருப்பதை கண்டுபிடித்ததோடு அதிகாரிகளுக்கு தகவலும் கொடுத்தனர்.  உடனடியாக விரைந்த அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, இவற்றை பதுக்கி வைத்திருந்தது யார் என்பது குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த இந்த சம்பவம் நாங்குநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நாங்குநேரியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் இவரதுதான் என உறுதி செய்யப்படாத நிலையில் வழக்கு மட்டும் பதியப்பட்டுள்ளது. 
 
அதேபோல் நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய சுயேட்சை வேட்பாளர் சங்கரசுப்பிரமணியனின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.