1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (18:29 IST)

வி.ஆர்.மால் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை.!!

VR Mall
சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
 
சென்னையில் மிக பிரபலமான வி.ஆர். மால் என்ற வணிக வளாகம் அண்ணாநகர் திருமங்கலத்தில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். 
 
இந்த நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் வி.ஆர் மாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக சென்று செயலிழக்க வைக்குமாறும் கூறி காவல்துறைக்கு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட மோப்பநாய் பிரிவு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வி.ஆர் மாலுக்கு சென்று ஒவ்வொரு கடையாக சோதனை நடத்தினர். 
 
திடீர் சோதனையால் பொதுமக்கள் யாரும் பயப்படக் கூடாது என்பதற்காக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து மாலில் இருந்து அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.  தொடர்ந்து மால் முழுவதும் சோதனை நடத்திய நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மின்னஞ்சல் முகவரியை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
சமீபகாலமாக சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோயில்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.