திங்கள், 16 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஜூலை 2024 (09:41 IST)

பழிவாங்க பதுங்கியிருக்கும் பாம் சரவணன்! - ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணையில் உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

Bomb Saravanan

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கு குறித்த விசாரணையின்போது அதற்கு பழிவாங்க பாம் சரவணன் என்ற நபர் தலைமறைவாக உள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவர் வீட்டின் முன்பே ரவுடி கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். இதில் திருவெங்கடம் என்ற ரவுடி தப்பி ஓட முயன்றபோது என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த நபர்களுக்கும் இந்த கொலை வழக்கில் தொடர்புள்ளதாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை அந்த அரசியல் கட்சிகள் கட்சியை விட்டு நீக்குவதாகவும் அறிவித்து வருகின்றன. இந்த கொலையில் ஆற்காடு சுரேஷ் கும்பல் பங்கு வகிப்பது தெரிய வந்துள்ளது.
 

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க ‘பாம்’ சரவணன் என்ற நபர் தலைமறைவாக உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் தென்னரசு. இவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு நெருங்கிய நண்பர்.

கடந்த 2016ம் ஆண்டில் தென்னரசு, ஆற்காடு சுரேஷ் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அந்த தென்னரசுவின் சகோதரர்தான் இந்த பாம் சரவணன். தனது அண்ணன் தென்னரசுவையும், அவரது நெருங்கிய நண்பர் ஆம்ஸ்ட்ராங்கையும் கொன்ற ஆற்காடு சுரேஷ் கும்பலை தாக்க திட்டமிட்டு அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்றும், கொலைக்கு பழிவாங்க அவர் முயற்சிக்கலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K