1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 ஏப்ரல் 2018 (14:29 IST)

ரஜினி வாயை அசைக்கிறார்..யாரோ குரல் கொடுக்கின்றனர் - பாரதிராஜா அதிரடி

எங்களை போலீசார் தாக்கிய போதும், கைது செய்த போதும் ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை என பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சென்னை வாலஜாசாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான், கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா, வெற்றிமாறன், களஞ்சியம், ராம் உள்ளிட்ட பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மேலும், நாம் தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 
 
அப்போது அவர்களின் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதில் இயக்குனர் வெற்றிமாறன் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடமே கலவர களமானது.  
 
அந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
 
ரஜினியின் இந்த கருத்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். திருச்சியில் உஷாவை போலீசார் வன்முறை செய்து கொலை செய்த போது ரஜினி ஏன் குரல்கொடுக்கவில்லை? என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். ஒருபக்கம் சீமானின் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நேற்று போராட்டம் நடத்திய அனைத்து அமைப்புகளின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது பேசிய பாரதிராஜா “ரஜினியின் குரல் யாருடையது?. எதிர்வினையை மட்டும் பூதாகரமாக்குவது சரியல்ல. அங்கு என்ன நடந்தது என ரஜினிக்கு தெரியாது. நாங்கள் எதிர்ப்புதான் தெரிவித்தோம். யாரையும் தாக்கவில்லை.ரஜினி வாயை மட்டும்தான் அசைக்கிறார். அவருக்கு யாரோ குரல் கொடுக்கின்றனர்” என தெரிவித்தார்.
 
அதேபோல், நான் போலீசாரை தாக்கவில்லை. தாக்குதல் நடந்த போது அதை விலக்கி விட்டேன் என சீமான் கூறினார்.
 
மேலும், சீமான் தனி மனிதன் அல்ல. அவரை கைது செய்ய விட மாட்டோம். அப்படி செய்தால் எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள் என அனைவரும் கூறினார்.  மேலும், நாளை காலை 9 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வரும் போது கருப்புக் கொடி காட்டி எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம் என பாரதிராஜா தெரிவித்தார்.