சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (09:53 IST)

அயோத்தி நேரடி ஒளிபரப்பை தடுக்க முயற்சி.! எல்.இ.டி திரை அகற்றம்.! நிர்மலா சீதாராமன் கண்டனம்..!!

nirmala
காஞ்சிபுரத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையை அகற்றியதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அயோத்தியில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருவதால், அங்கு விழா கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பார்க்கும் வகையில் மத்திய பாஜக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
அதன்படி காஞ்சிபுரத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய 466 இடங்களில் எல்இடி திரைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையை போலீசார் அகற்றியதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி திரைகளை போலீசார் அகற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு தடுக்க முயற்சிப்பதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
 
தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க திமுக அரசு தவறிவிட்டது என்றும் பிரதமர் மீதான வெறுப்பை திமுக தற்போது வெளிப்படுத்துகிறது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

 
மேலும் திமுக அரசு, எல்.இ.டி திரைகளை அகற்றி வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கிறது என்றும் தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே எல்.இ.டி திரை வைக்க அனுமதி கூறாததால் அதனை அகற்றியதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது