1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (07:59 IST)

அமைச்சர் சேகர்பாபு செப்.10-க்குள் பதவி விலகாவிட்டால்... அண்ணாமலை எச்சரிக்கை..!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செப்டம்பர் பத்தாம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என்றும் இல்லையேல் செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை தலைமை அலுவலகம் முன்பு பாஜக முற்றுகை போராட்டம் நடத்தும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் பிழைப்புவாதிகள் நடத்திய கூட்டமொன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். அவருக்குப் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை.
 
ஆனால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மிக உரிமையை அவர் இழந்து விட்டார்.இன்னும் ஒரு வார காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர்பாபு பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை?
 
வரும் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள், சேகர்பாபு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11-ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva