ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (13:27 IST)

அட்ஜஸ்ட் பண்ணி போறது இந்த அண்ணாமலை பாலிசி இல்ல! – பாஜக அண்ணாமலை அதிரடி!

Annamalai
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையான நிலையில் அண்ணாமலை அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள நிலையில் சமீபமாக இரு கட்சியினரிடையே ஏற்பட்டு வரும் மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாஜகவினர் சிலர் அதிமுகவில் இணைந்த நிலையில் பாஜக தொண்டர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியதுடன், உருவப்படத்தை எரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சி தாவுதல் செயல்பாடுகள் குறித்து பேசியபோது பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னை ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகிய தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசினார்.

இந்த விவகாரம் மேலும் சர்ச்சையான நிலையில் ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற பெரும் தலைவர்களோடு அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுக் கொள்ள முடியாது என அதிமுக பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்துள்ளனர்.

இந்த சர்ச்சை குறித்து தற்போது கோவையில் பேட்டி ஒன்றில் அதிரடியாக பதிலளித்த அண்ணாமலை “சில கட்சிகளுக்கு மேனேஜர்கள் இருப்பார்கள் அவர்கள் சொந்தமாக எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். சில கட்சிகளுக்கு தலைவர்கள் இருப்பார்கள் வெற்றியோ, தோல்வியோ அவர்கள் பகிரங்கமான முடிவுகளை எடுப்பார்கள். ஜெயலலிதா அப்படிபட்ட தலைவர். முழுவதும் டெபாசிட் இழந்து அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை பிடித்தவர். நானும் அவ்வாறான தடாலடியான முடிவுகளை எடுக்கக்கூடிய தலைவர் என்றுதான் சொன்னேன். அவரோடு என்னை ஒப்பிடவில்லை. நான் எந்த விதமான சமரசங்களையும் ஏற்காத, அதிரடி முடிவுகளை மேற்கொள்ளக்கூடிய தலைவர் என்றுதான் சொல்லி இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K