1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (16:14 IST)

ஒரு சொட்டு சாராயம் கூட கிடைக்ககூடாது... ப்ரஷர் கொடுக்கும் அன்புமணி

தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை என அன்புமணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார். 
 
தமிழக அரசு மதுக்கடைகள் நடத்துவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது பாமக. தற்போது ஆளும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் அவ்வபோது மதுக்கடைகளை மூட வேண்டியது குறித்த பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
 
அந்த வகையில் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பூரண மதுவிலக்கை தற்போது ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்கு நாங்கள் தான் காரணம். தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். 
எங்களது இலக்கு பூரண மதுவிலக்கு தான். ஒரு சொட்டு சாராயம் கூட இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அணுகி பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் உறுதியாக கொண்டு வரும் என்றும் உறுதிபட கூறினார்.
 
இதற்கு முன்னர் நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையின் மூன்று தினங்களில் மட்டும் டாஸ்மாக்கில் 600 கோடிக்கும் மேல் மது வகைகள் விற்பனை செய்தது. இதை அறிந்த ராமதாஸ், பொங்கல் திருநாளில்  ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும் என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.