வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 28 டிசம்பர் 2016 (03:29 IST)

சசிகலா-அஜித் சந்திப்பு வெறும் கப்சாவா? - செய்தி தொடர்பாளர் விளக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் அஜித் சந்தித்து பேசியதாக வெளியான தகவல்கள் நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.


 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனால், கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு விவாதங்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு டிசம்பர் 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலாதான் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், ஜெயலலிதா மறைவடைந்த போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தார் அஜித் அப்போது நேரில் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாததால், இரங்கல் மட்டும் தெரிவித்து இருந்தார். பின்னர், சென்னை வந்ததும் ஜெயலலிதாவின் சமாதிக்கு, தனது மனைவி ஷாலினியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், சசிகலாவை நேரில் சந்தித்தாக கூறப்பட்டது. போயஸ் கார்டன் சென்று அஜித், அங்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஆனால், மேற்கண்ட தகவலுக்கு நடிகரின் அஜித்தின் செய்தி தொடர்பாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார். ’அஜித் - சசிகலா இடையே எந்த சந்திப்பும் நடக்கவில்லை. இது தொடர்பாக, வெளியாகிவரும் பொய்யான வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்’ என அவர் கூறியுள்ளார்.