1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (00:18 IST)

ஆப்கானிஸ்தான் - இறுதிக்கட்ட மீட்பு பணிகள் தீவிரம்

தங்கள் நாட்டின் குடிமக்களை ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றும் கடைசி விமானம் அங்கிருந்து கிளம்பி விட்டதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இனி ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பி வரும் விமானங்கள் மூலம் பிரிட்டனின் வெளியுறவு அதிகாரிகளும் பாதுகாப்பு படையினருமே அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினர் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் அனைவரையும் மீட்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அமெரிக்காவும் தமது மீட்பு நடவடிக்கைகளை மிகவும் துரிதப்படுத்தி உள்ளது.

எனினும் மேலதிக தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதால் காபூல் விமான நிலையம் வருவதை தவிர்க்குமாறு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஐந்தாயிரம் ஆப்கானிஸ்தான் குடிமக்களை அங்கிருந்து வெளியேற்றி உள்ளதாக அறிவித்துள்ளது இத்தாலி. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு ஒன்றால் அதிகபட்ச ஆப்கானியர்கள் மீட்கப்பட்டது இதுதான் என்றும் இத்தாலி அரசு கூறுகிறது.

பாகிஸ்தான் உடனான எல்லை வாயிலாக ஆப்கானியர்கள் தங்கள் தாய் நாட்டில் இருந்து வெளியேற முயற்சி செய்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.