1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 1 டிசம்பர் 2016 (12:54 IST)

ஆமா அப்படித்தான் ; ஸ்ரீபிரியாவுக்கு பதில் கூற விரும்பவில்லை : குஷ்பு அதிரடி

தொலைக்காட்சிகளில் குடும்ப பிரச்சனை அலசும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்திருந்தார்.


 

 
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது சன் டிவியிலும் நிஜங்கள் என்ற பெயரில் நடிகை குஷ்பூ குடும்ப பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.  
 
மேலும், இது போன்ற நிகழ்ச்சிகளை தெலுங்கில் நடிகை ரோஜா தற்போது கீதா, மலையாளத்தில் நடிகை ஊர்வசி போன்ற நடிகைகள் நடத்தி வருகின்றனர். 
 
இந்த நிகழ்ச்சிகளில் குடும்ப பிரச்சனைகள் அலசப்படுகிறது. சில சமயங்களில் அது சண்டைகளிலும் முடிகிறது.  எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகள் தற்போது பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிக்கும் அளவுக்கு வந்துள்ளது.  
 
சாதாரண மக்களின் பிரச்சனையை ஊடக வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அதன் மூலம் காசு பார்ப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் மனதில் பட்டதை உடனே வெளிப்படுத்தும் நடிகை ஸ்ரீப்ரியா சமீபத்தில் கோபமாக ஒரு பதிவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  
 
அதில், மக்களுக்கு குடும்பத்தில் பிரச்சனை என்றால் அதனை தீர்த்து வைக்க நீதிமன்றம் இருக்கிறது. குற்றச்செயல்கள் செய்திருந்தால் அதனை தீர்க்க பல்வேறு சட்ட பிரிவுகள் இருக்கிறது. ஆனால் அதனை விட்டுவிட்டு சினிமா நடிகைகள் நடுவர்களாக இருந்து கொண்டு இது போன்ற பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சி நடத்துவது நல்லதல்ல. இதனை நிறுத்த வேண்டும் என்றார் கோபமாக. 
 
மக்களின் பிரச்சனையை தீர்க்க இது ஒரு தளம் என்றால் அதனை கேமரா இல்லாமல் செய்யுங்கள். அவர்களை சரியான நபர்களிடன் அழைத்து செல்லுங்கள். வழக்கறிஞர்கள், ஆலோசகர்களிடம் அழைத்து செல்ல உதவுங்கள் எனவும் கூறியுள்ளார். 
 
அதேபோல், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை ராதிகா, “அதுபோன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள். அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
ஸ்ரீப்ரியா மற்றும் ராதிகாவின் கருத்துகளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள குஷ்பு “ ஸ்ரீபிரியாவின் கருத்து குறித்து மீடியாக்கள் பேசி வருகின்றன. அவருக்கு நான் பதில் அளிக்கவிரும்பவில்லை. அவர் என்னுடைய சீனியர். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருடைய கருத்தை தெரிவிக்கும் உரிமை அவருக்கு உள்ளது.
 
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பெண்கள், குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தி வந்தேன். சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிஜங்கள் நிகழ்ச்சியால் பலரின் பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் எங்களை தேடி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் பிரச்சனை குறித்து மனம் திறந்து பேசுகிறார்கள். அவர்களின் கண்ணீர் உண்மையானது. எனவே இரு தர்ப்பினரிடமும் பேசி முடிந்த வரை பிரச்சனைகளை தீர்க்க முயல்கிறேன். உண்மையான அக்கறையுடன் அவர்களிடம் பேசுகிறேன்.
 
அந்த நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகல், சட்ட நிபுணர்கள், மனோதத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். எனவே, யார் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என பார்க்காமல், முடிவுகளை பாருங்கள்” என்று கூறினார்.