1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (10:16 IST)

ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்: நயினார் நாகேந்திரன் உட்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு!

Nainar Nagendran
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 25 பேர் மீது பறக்கும்படி அதிகாரிகள் தந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதை அடுத்து பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தாம்பரத்திலிருந்து நெல்லை செல்ல இருக்கும் ரயிலில் பயணம் செய்ய இருந்த மூன்று பேர்களை பறக்கும்படி அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்ததில், அவர்களிடம் ரூபாய் 4 கோடி இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவர்களை கைது செய்த பறக்கும் படை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில் மூன்று பேரும் ஜாமீன் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த நான்கு கோடி பறிமுதல் செய்யப்பட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் கொண்டு செல்லப்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது, தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக பறக்கும் படை அதிகாரி தினேஷ் குமார் தந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edited by Mahendran