கர்நாடகாவில் ரயில் தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது இளைஞர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கால இளைஞர்கள் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த லலன், ராகுல், பிகேஷ் ஆகிய 3 இளைஞர்கள், கர்நாடக மாநிலம் தொட்டபள்ளாபுரா பகுதியில் உள்ள ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
நேற்று மாலை நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது சித்தேநாடக்கனஹள்ளி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு சென்று அங்கு சில ரீல்ஸ் வீடியோக்களை எடுத்துள்ளனர். அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்துக் கொண்டிருந்த நிலையில் அதை பொருட்படுத்தாமல் அவர்கள் வீடியோ எடுப்பதில் மும்முரமாக இருந்ததால், ரயில் மூன்று பேர் மீதும் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே மூவரும் பலியானார்கள். இளைஞர்கள் ரயில் மோதி இறந்தது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடம் விரைந்து வந்து இளைஞர்கள் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K