வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (14:46 IST)

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 சிறுவர்கள் பலி.! சோகத்தில் மூழ்கிய கிராமம்..!!

child death
திண்டிவனம் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
திண்டிவனம் அடுத்த கோனேரிக் குப்பம் தாந்தோணியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகள் பிரியதர்ஷினி (11), இவர் கோனேரி குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.  

இவரும் இதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த இவரது தங்கை சுபலட்சுமி (8) மற்றும் கோனேரி குப்பம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் சஞ்சய் (10)ஆகிய மூன்று பேரும் நாவல் பழம் பறிப்பதற்காக நல்லாத் தூரிலிருந்து ஓங்கூர் செல்லும் ஓங்கூர் ஆற்றை கடந்தனர். 

அப்போது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த ஒலக்கூர் போலீசார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். 3-பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் உள்ள உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இனி வரும் காலங்கள் மழைக்காலம் என்பதால் அந்தந்த பகுதிகளில் உள்ள குளம், குட்டை, கிணறு, ஆறு ஆகியவை நீர் நிறைந்து காணப்படும் என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இது போன்ற உயிர் பலிகளை தடுக்க வேண்டும்  என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.