1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (08:44 IST)

ஈபிஎஸ் காட்டுல மழை... பொதுக்குழு நடந்த 2300 நிர்வாகிகள் ஆதரவு!

அதிமுக பொதுக்குழுவை நடத்த 2,300க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என ஈபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

 
அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி அணி கூறி வரும் நிலையில், ஒற்றைத் தலைமை தேவையில்லை என ஓபிஎஸ் அணியினர் மறுத்து வருகின்றனர். மேலும் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் அணி கூறி வருகின்றது.
 
ஆனால் எடப்பாடியார் அணியோ பொதுக்குழு எடுக்கும் முடிவுதான் ஒற்றைத் தலைமையை தீர்மானிக்கும் என கூறி வருகிறது. இந்நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க எடப்பாடிக்கு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால் பொதுக்கூட்டம் திட்டமிட்ட படி நடக்கும் என ஜெயகுமார் கூறினார். 
 
இதனைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவை நடத்த 2,300க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என ஈபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளனர். ஆம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனராம். பொதுக்குழுவில் கலந்து கொள்வோம் என உறுதி அளித்தும் மாவட்ட செயலாளர்கள் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.