வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By காஜா பந்தா நவாஸ்
Last Modified: சனி, 5 அக்டோபர் 2019 (15:25 IST)

மகளதிகாரம் - கவிதைகள்!!

நெடுந்தூரப் பயணம் ஒன்றில் உன் விரல் பிடித்து நடக்க ஆசை !
காலம் காயங்களுடன் எனக்கு கற்று தந்த பாடங்களை
காயங்கள் இன்றி உனக்கு கற்று தர ஆசை !
நீ வந்த பின்பு என் நாட்கள் அழகானது !
 
இது அழகு விடியல் மட்டும் அல்ல
இது அன்பின் விடியலும் கூட ! 
 
இரும்பாகிப் போன நேசங்கள் !
தூரமான சொந்தங்கள் !
 
என்னை நானே தேற்றிக் கொள்ளுகின்ற கடினமான தருணம் இது
இருந்த போதும் நான் வீழவில்லை
 
உயிரானவளும் !
உலகனாவாளும் !
உணர்வாகிப்போனவளும் !
ஆன
உன்னை மட்டுமே நான் சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன்
 
உன்னை மட்டுமே
நேசிக்கிறேன்
உன்னை மட்டுமே
வாசிக்கிறேன்
 
உன்
சின்னச்சிறு
மழலைச்சொல்க் கேட்டு
உன்
அன்பு மொழிக்கேட்டு
 
இன்னும் ஜனனம் செய்துக்கொண்டிருக்கிறேன் 
 
எல்லாம் எழுதி விட்டேன்
வாசிக்கத் தான் முடிய வில்லை
எழுத்துப்பிழை அல்ல !
 
இருந்தப்போதும் என்னால் வாசிக்க முடியவில்லை !
 
சில காயங்களை மருந்தால் சரி செய்து கொண்டேன் !
பல காயங்களை
உன் இன் முகத்தால் சரி செய்துக் கொள்கிறேன் !
உன் புன் சிரிப்பால் கவலைகளை மறந்துப் போனேன் ! 
 
மகள் என்னும் அற்புதம்
 
என் வெற்றிகளின் போதும் !
என் தோல்விகளின் போதும் !
உன்னையே நான் தேடுகிறேன்.
 
தோல்வியிலும், வெற்றியிலும்
என்னை உற்சாகப்படுத்தும் அற்புதம் நீ !
 
அதுவே என்னை உனதாக்கியது.