வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

கிராமத்து ஸ்டைலில் ஆட்டுக்கறி குழம்பு செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
ஆட்டுக்கறி - 1 கிலோ
பெரிய தக்காளி - 2  
சின்ன வெங்காயம் - 10  
காய்ந்த மிளகாய் - 10  
எண்ணெய் - தேவையான அளவு  
சோம்பு  - அரை ஸ்பூன்   
உப்பு - தேவையான அளவு  
பூண்டு - 5 பல்
ஏலக்காய் - 2  
துருவிய தேங்காய் - கால் கப்
மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன் 
பட்டை - 1 துண்டு   
லவங்கம் - 2 
கசகசா - 1 ஸ்பூன் 
மிளகு - 2 ஸ்பூன் 
தனியா - 1 ஸ்பூன் 
கருவேப்பிலை - சிறிதளவு      
கொத்தமல்லி தழை - சிறிதளவு    
கடுகு - 1 ஸ்பூன்     
சீரகம் - 1 ஸ்பூன்     
உளுந்து - 1 ஸ்பூன்     
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்

செய்முறை: 
 
முதலில் கறியை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் கறியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு என அனைத்தையும் தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் பட்டை,  லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 
 
இன்னொரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு  கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, என அனைத்தையும் சேர்த்து தாளிக்கவும்.
 
பிறகு வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். அத்துடன்  வேகவைத்த ஆட்டுக் கறியை  சேர்க்கவும்.
 
அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து எண்ணெய் நன்கு திரண்டு வரும் வரையில் கொதிக்க விடவும். நன்கு கொதித்த பிறகு கடைசியாக கறிவேப்பிலை கொத்தமல்லியை தாளித்து கொட்டி இறக்கினால் சுவையான கிராமத்து கறிக்குழம்பு தயார்.