1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

செட்டிநாட்டு வஞ்சிர மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:
 
வஞ்சிர மீன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 25 பல்
கறிவேப்பிலை - 2 கொத்து
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
தக்காளி - 3
புளி - கைப்பிடியளவு
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 10
சாம்பார் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 

 
செய்முறை:
 
முதலில் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுளாக நறுக்கி உப்பு போட்டு பிசறி நன்கு கழுவி வைக்க வேண்டும். வர மிளகாய், சோம்பு, பூண்டு மூன்றையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நைஸான விழுதாக அரைத்து வைக்க வேண்டும். வெங்காயத்தில் இரண்டை எடுத்து வைத்து விட்டு மற்றதை தோலுறித்து இரண்டாகவும், தக்காளிகளை நான்காகவும் நறுக்க வேண்டும். 
 
புளியை மூன்று டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரைத்த விழுதையும் போட்டு கரைத்து வைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சோம்பு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு வாசனை வந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு மூன்று நிமிடம் வதக்க வேண்டும். பின் தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, சாம்பார் பொடி மஞ்சள்பொடி மற்றும் அரைத்த விழுது ஆகியவற்றையும்  சேர்த்து மூன்று நிமிடம் வதக்க வேண்டும். இப்போது புளிக் கரைசலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். 
 
பின் மீன் துண்டங்களைப் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். சீரகத்தை நன்றாகத் தட்டி பிறகு இரண்டு வெங்காயத்தையும் வைத்து லேசாகத் தட்டி குழம்பில் போட்டு மூடி பத்து நிமிடம் கழித்து திறந்து லேசாக கிண்டி விட வேண்டும்.