செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பற்களை பாதுகாக்கும் வழிமுறைகளும் சில டிப்ஸ்களும்...!!

எலும்பு தாதுவிலிருந்துதான் பற்கள் வலிமை பெறுகின்றன. அதனால் நமது உடலில் எலும்பை பலப்படுத்தும் உணவும் பானமும் மருந்துகளும் சிறுவயது முதலே  உட்கொள்ளத் தொடங்கினால் எலும்புடன் பற்களும் உறுதிப்படும்.

பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
 
பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 
பற்களை திடமாக வைப்பதில் நல்லெண்ணெய்க்கு நிகராக எதுவுமில்லை. தினமும் காலையில் பல்துலக்கியதும் அரைவாய் நிறையும் அளவு நல்லெண்ணெயை வாயில் விட்டுக் கொண்டு 10 -15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு துப்ப வேண்டும். இதை தைல கண்டூஷம் என்று ஆயுர்வேதம் வர்ணிக்கின்றது. 
 
தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
 
சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
 
பல் துலக்கும் முறையில் அதிக அழுத்தம் கொடுத்து பற்களை தேய்க்கக்கூடாது. ஈறுகளில் பிரஷ் படாதவாறு நிதானமாகத் தேய்க்க வேண்டும். மேல் வாய்  பற்களை தேய்க்கும்போது மேலிருந்து கீழாகவும், கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். பல் தேய்த்ததும் வாயில் நிறைய தண்ணீர் விட்டு  கொப்பளிக்க வேண்டும்.
 
இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.