வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சுவையான முருங்கைக்காய் சாம்பார் செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
துவரம் பருப்பு - 100 கிராம்
காயம் - 1/4 தேக்கரண்டி
முருங்கைக்காய் துண்டுகள் - 8
தக்காளி  - 1
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 3
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
மல்லித் தழை - சிறிது
 
தாளிக்க தேவையான பொருட்கள்: 
 
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை:
 
குக்கரில் பருப்பு, காயம், மஞ்சள் தூள் மற்றும் முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும். தக்காளி, மிளகாயை நீளவாக்கில்  வெட்டி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளவும். புளியை 300 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
 
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் 300 மில்லி புளித் தண்ணீருடன் முருங்கைக்காய், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து அடுப்பில்  மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவிடவும்.  ஐந்து நிமிடங்கள் ஆனதும் மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து மசாலா வாடை போகும்வரை நன்றாக  கொதிக்கவிடவும்.
 
மசாலா வாடை போனதும் வேகவைத்துள்ள பருப்பை போட்டு நன்றாக கலக்கிவிடவும். கொதித்ததும் மல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வெங்காயம் போட்டு தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து நன்றாக கலக்கிவிடவும். சுவையான முருங்கைக்காய் சாம்பார் தயார்.