வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கீரையின் முழு பயன்களை பெற எவ்வாறு பயன்படுத்தவேண்டும்....?

கீரைகள் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். வாடி வதங்கி இருக்கக் கூடாது. பூச்சிகள் அரித்த கீரையைத் தவிர்த்திடுங்கள்.

கீரைகளை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் போகும், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும். பூச்சிகள், கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், மாசு போன்றவற்றால் கீரைகள் பாதிக்கப்பட்டு வளர்வதால், கீரைகளை சமைப்பதற்கு முன், நீரில் நன்றாகக் கழுவுவது அவசியம்.
 
கீரைகளைப் பொரிக்கவோ, நீண்ட நேரம் வேகவைக்கவோ கூடாது. அதே நேரம், போதுமான அளவு வெந்திருக்க வேண்டும். கீரைகளை வேகவைக்க, சிறிது அளவு நீர் ஊற்றினாலே போதும்.
 
மழை, வெயில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.
 
கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால்  மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும்.
 
கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகையை விரட்டும் முருங்கை. முருங்கை மரத்தில்  கிடைக்கும் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமே. அதிகச் சத்துக்கள் நிறைந்தது முருங்கைக் கீரை.
 
சத்துக்கள்: கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் சி, இரும்புச் சத்துகள், நார்சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் இருப்பவை இரும்புச் சத்தும், வைட்டமின்  சி-யும் உள்ளது.
 
பலன்கள்: இரும்புச் சத்தும் வைட்டமின் சியும் சேர்ந்த கலவை, ரத்தத்தை உற்பத்தி செய்யும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால், முடி உதிர்தல் நிற்கும். இளநரையைப் போக்கும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். உடல்சூடு தணியும்.  உடல்நலத்தை அதிகரிக்கும்.
 
ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் வாரம் இருமுறை,  முருங்கைக் கீரை சூப் வைத்து, அதில் எலுமிச்சைச் சாறை சிறிதளவு சேர்த்து சாப்பிடலாம்.