செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எளிதில் கால்சியம் கிடைக்க பருப்புக்கீரை...!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குறைக்கக்கூடியது. பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்வது.
பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவும். அடிக்கடி பருப்புக்கீரையை உணவில் சேர்த்துக்  கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கும்.
 
வெயில் காலத்தில் உண்பதற்கு ஏற்ற கீரை இது. பருப்புக் கீரை மசியலுடன் நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு  நீர்க்கடுப்பு வியர்க்குரு வேனல்கட்டிகள் போன்றவை தவிர்க்கப்படும். அதே போல வெயில் காலத்தில் ஏற்படுகின்ற அம்மை மற்றும் அக்கி பிரச்சனைகளுக்கும் பருப்புக் கீரையை மருந்தாக பயன்படுத்துகிறார்கள். பருப்புக் கீரையை நன்கு அரைத்து அக்கி வந்த இடங்களில் மேல்பூச்சாகத் தடவி வந்தால், கொப்புலங்கள்  மறைந்து உடல் குளுமையடையும்.
 
பருப்புக் கீரையில் உள்ள ஆக்சாலிக் அமிலம் சிலருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணமாகலாம். எனவே சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரகக் கோளாறு  உள்ளவர்கள் பருப்புக் கீரையைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.
ஒமேகா 3 உள்ள அற்புதக் கீரை பருப்புக் கீரை. கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் பருப்புக் கீரையைப் பயன்படுத்தினால் எளிதில் கால்சியம் கிடைக்கும். மலச்சிக்கலைப் போக்குகிறது, குடற்புழுக்களை அகற்றுகிறது. இரைப்பையில் மிகுதியாக சுரக்கும் அமிலம் காரணமாக ஏற்படும் நெஞ்செரிச்சலை போக்குகிறது!
 
பித்தம் அதிகம் உள்ளவர்கள். அடிக்கடி தலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்றது. இக்கீரையின் விதைகளை 4 கிராம் அளவிற்கு எடுத்து நன்றாக தண்ணீர் கொண்டு  சுத்தம் செய்து இளநீரில் போட்டு பருகினால் சீதபேதி நிற்கும். மேலும் வயிற்று எரிச்சல், சிறுநீர் எரிச்சல் போகும்.