வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

புற்றுநோய் செல்களை அழிக்கும் சப்பாத்திக் கள்ளி!!

சப்பாத்திக் கள்ளி வறண்ட நிலங்களிலும் சாலையோரங்களிலும் காணப்படும் முள்செடியான இதற்கு பாதாளமூலி, நாகதாளி என்ற வேறு பெயர்களும் உண்டு. சப்பாத்தியைப் போன்று வட்ட வடிவத்தில் பச்சைப் பசேல் என செழித்து வளரும்.
இந்த மூலிகைச் செடியில் ஆங்காங்கே முட்கள் காணப்படுவதால் ஆடு, மாடுகள் நெருங்காது. ஆகவே பெரும்பாலும் கிராமப்புறத்து வயல் வெளிகளிலும், நகர்ப்புறத்து தோட்டங்களிலும் வேலிகளில் வளர்ப்பார்கள். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூக்கும்; ரோஸ் மற்றும்  அடர் சிவப்பு நிறத்தில் பழங்கள் பழுக்கும்.
 
சப்பாத்திக் கள்ளியில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துகளும் உயர்தரமான நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இயற்கை மருத்துவத்தில், சப்பாத்திக்கள்ளிச் செடிக்கு, தனி இடம் உண்டு. மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மூலிகையாகத் திகழும் சப்பாத்திக் கள்ளி, ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாக பெரிதும் உதவிபுரியும். குறிப்பாக, முதுமையில் ஏற்படும் `அல்சைமர்' எனப்படும் ஞாபகமறதி  நோய்க்கு சரியான மருந்தாக விளங்குகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்களை அச்சுறுத்தும் புற்று நோயைப் போக்கும் மருந்தாகவும், அவை வராமல் தடுக்கவும் ஒரு மெய்க்காப்பாளனாக விளங்குகிறது சப்பாத்திக்கள்ளி. 


 
சப்பாத்திக் கள்ளிப் பழத்தில் உள்ள அஸ்கார்பிக் என்ற அமிலம் நம் உடலில் இருக்கும் நல்ல செல்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜனை  கொண்டு செல்லும். அதேநேரத்தில் புற்றுநோய் செல்களுக்கு செல்லும் ஆக்சிஜனை தடை செய்து புற்றுநோய் செல்களை அழித்துவிடும்.  உடலில் வரக்கூடிய அனைத்து கட்டிகளையும் கரைக்க சப்பாத்திக் கள்ளி பயன்படும். 
 
சப்பாத்திக் கள்ளி பழம் வெயிலில் ஏற்படும்  நாவறட்சியைப் போக்கும். சப்பாத்திக் கள்ளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து  குறைபாடுகளையும் போக்கும். 
 
சப்பாத்திக் கள்ளிப் பழத்தில் உள்ள உயர்தரமான நார்ச்சத்து உடல்பருமனைக் குறைக்க பெரிதும் உதவி செய்யும். சப்பாத்திக் கள்ளிப் பழத்தை நன்றாகப் பசையாக்கி சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், வலி உள்ள இடத்தில் மேல்பூச்சாகப் பூசினால் சீக்கிரம் குணம் தெரியும். ரத்த அழுத்தம், இதய நோய் வராமல் பாதுகாக்கும் தன்மை உள்ளது. பார்வைக் குறைபாட்டைப் போக்குவதுடன் ரத்த சர்க்கரையின் அளவைக்  குறைக்கும். பூச்சிக்கடி, வண்டுக்கடி விஷத்தை நீக்கும். 


 
சப்பாத்திக் கள்ளியை முள் நீக்கி சுத்தம் செய்து பசையாக்கி 20 கிராம் அளவு தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சூடாக மலம்  வெளியேறுவது, மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளும் விலகிச் செல்லும். இதன்  பழச்சாற்றில் மணப்பாகு செய்து சாப்பிட்டால் கோடை காலத்தில் வரக்கூடிய நோய்கள் அனைத்தும் நீங்கும். 
 
சப்பாத்திக் கள்ளி பழம் மட்டுமல்லாமல் அதன் சதைப் பகுதியும்கூட நல்ல மருந்துதான். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சப்பாத்திக் கள்ளியின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பிரச்சினை உள்ள இடங்களில் பூசினால் குணம் கிடைக்கும். இதன் பூக்களை நசுக்கி கட்டிகளின்மீது கட்டி வந்தால் கட்டிகள் உடைந்து குணம் கிடைக்கும்.