1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (11:40 IST)

மீண்டும் மீண்டும் கைது - காஃபில் கானை பழிவாங்குகிறதா யோகி அரசு?

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த குழந்தைகள் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருக்கும் மருத்துவர் காஃபில் கான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் உத்தரபிரதேசத்திலுள்ள கோரகபூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமையில் ஆக்ஸிஜன் வாயு பற்றாக்குறையால் 72 குழந்தைகள் இறந்தன. இது குறித்த விசாரணையில் ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகையை மாநில அரசு செலுத்தவில்லை என்றும் இதுகுறித்து ஆக்ஸிஜன் வழங்கும் தனியார் நிறுவனம் பலமுறை நினைவூட்டியும் மாநில அரசு கண்டு கொள்ளாததால் ஆக்ஸிஜன் வழங்கல் நிறுத்தப்பட்டததாகவும் தெரிய வந்தது.
 
அந்த மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் பணியாற்றி வந்த காஃபில் கான் என்ற மருத்துவர் குழந்தைகள் உயிரை காப்பாற்றுவதற்காக தனது சொந்த செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்கி குழந்தைகளை காப்பாற்றினார். இந்த செய்தி சமூக வலை தளங்களிலும் ஊடகங்களிலும் பரவி காஃபில் கானுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தன.
 
அதே சமயத்தில் உத்திர பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க அரசு மீதும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. தங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டை மறைக்க அம்மாநில அரசு மருத்துவமனை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. மருத்துவமனையின் மருந்துகள் வாங்கும் பிரிவைச் சேர்ந்த பணியாளர்களைக் கைது செய்ய உத்தரவிட்டது. ஆக்ஸிஜன் வழங்கும் குழுமத்தின் தலைவர், காஃபில் கான் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

 
அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் காஃபில் கானுக்கு 7 மாதங்கள் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் ஜாமின் கிடைத்து வெளியில் வந்தார். ஆனாலும் காஃபில் கானுக்கு மாநில அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே வந்தது. 
 
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை(செப்-23) கோரக்பூர் மாவட்ட மருத்துவமனை ஒன்றில் அவர் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க விடாமல் தொந்தரவு செய்தததாக சொல்லி கைது செய்ய்ப்பட்டார். அந்த வழக்கில் நேற்று(செப்-24) அவருக்கு ஜாமின் கிடைத்தது. ஆனாலும் நேற்றே அவர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்பது வருடங்களுக்கு முன்னால் அவரும் அவர் சகோதரரும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பித்ததாகவும் அதன் மூலம் ரூ.82 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை செய்திருப்பதாகவும் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இத்தகைய தொடர் கைதுகளின் மூலம் காஃபில்கானை மாநில பா.ஜ.க. அரசு பழிவாங்கி வருவதாக பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.