1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (11:11 IST)

விக்ரம் லேண்டரிலிருந்து எந்த தகவலும் வரவில்லை: இஸ்ரோ அறிவிப்பு

நிலவில் சாய்ந்தபடி விழுந்த கிடந்த விக்ரம் லேண்டரிலிருந்த எந்த தகவலும் வரவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ள சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இதனை தொடர்ந்து நிலவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது. அதன் பின்பு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது, நிலவுக்கு 2.1 கி.மீ. தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் முயற்சியை கைவிடாத இஸ்ரோ விஞ்ஞானிகள், இரண்டு நாட்களுக்கு முன்பு, நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டரின் மூலம், விக்ரம் லேண்டர், நிலவின் திட்டமிடப்பட்ட இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் சாய்ந்து கிடப்பதாக கண்டறிந்தனர். லேண்டரில் எதுவும் சேதம் ஏற்பட்டுள்ளதா? என கண்டறிய முயன்ற போது லேண்டரில் எந்த வித சேதமும் இல்லை என தெரியவந்தது.

இந்நிலையில் விக்ரம் லேண்டரிலிருந்து எந்த தகவலும் வரவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டருக்கு தொடர்பு கொள்ள தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.