வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2019 (14:30 IST)

காற்று மாசு குறைய யாகம் நடத்த வேண்டும்! – உ.பி அமைச்சர் கருத்து!

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள சூழலில் காற்று மாசு குறைய யாகம் நடத்த வேண்டும் என அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லி தீவிரமான காற்று மாசுபாடுக்கு உள்ளாகியிருக்கிறது. மக்கள் வெளி இடங்களில் நடமாட மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு விளையாட வந்துள்ள வங்கதேச வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டே பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் இன்று முதல் டெல்லியில் வாகன கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாசு ஓரளவு கட்டுப்படும் என்றாலும் முழுமையாக குறைக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இந்த காற்று மாசுபாடு பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த உத்தர பிரதேச அமைச்சர் சுனில் பராலா “காற்று மாசுப்பாட்டை குறைக்க அரசு மழை கடவுளான இந்திரனுக்கு யாகம் செய்ய வேண்டும். காற்று மாசுபாடை அவர் பார்த்து கொள்வார்” என பேசியிருக்கிறார்.

இந்த காற்று மாசு பிரச்சினையை அறிவியல்ரீதியாக எப்படி அணுகுவது என்பதை விடுத்து, ஆன்மீக யாகம் செய்ய சொல்லி அமைச்சர் பேசுவது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.