1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (16:04 IST)

உன்னாவ் வழக்கில் குல்தீப் செங்கார் குற்றவாளி..

பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கிடம் வேலைக்கு சென்ற 17 வயது பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குல்தீப் சிங் குற்றவாளி என டெல்லி கோர்ட் அறிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது பெண் ஒருவர், வேலை கேட்டு சென்றபோது, பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் தன்னை வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகார் அளித்தார். குல்தீப் சிங்கிற்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏக்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற புகாரை வாபஸ் வாங்குமாறு மிரட்டினர்.

பின்பு அந்த தந்தையை போலீஸ் கைது செய்து காவலில் வைத்து அச்சுறுத்தியபோது காவலிலேயே உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ. குல்தீப் செங்காரை சி.பி.ஐ கைது செய்தது.

அதன் பின்பு அப்பெண்ணும் அவரது வக்கீல் மற்றும் உறவினர்கள் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது லாரி ஒன்று மோதியதில் அப்பெண்ணும் வக்கீலும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அவரது உறவினர்கள் 2 பேர் பலியானார்கள். இது எம்.எல்.ஏ ஆதராவாளர்களின் சதி என கண்டறியப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ, குல்தீப் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை வழக்கும், 20 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் பதிவி செய்தனர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு கடந்த ஆகஸ்து 12 ஆம் தேதி, ”எங்கள் குடும்பத்தை கொன்று விடுவதாக எம்.எல்.ஏ. மிரட்டி வருகிறார்” என கடிதம் எழுதினார். பின்பு இவரது வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையே குல்தீப்பை பாஜக தனது கட்சியில் இருந்து நீக்கியது.

இந்நிலையில் உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்காரை குற்றவாளி என அறிவித்துள்ளது டெல்லி நீதிமன்றம். மேலும் செங்காருக்கான தண்டனை விவரம் குறித்த வாதம் வருகிற 19 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.