1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (10:40 IST)

கேரளா நீட் தேர்வு விவகாரம்: மேலும் இருவர் கைது!

கேரளா நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மேலும் இரண்டு பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
கடந்த ஞாயிறு அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தபோது கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகள் சிலரின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லி வலியுறுத்தி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை பணியாளர்கள் மூன்று பேர் மற்றும் கல்லூரி ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 5 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்தது. 
 
சர்ச்சைக்குரிய தேர்வு மையத்தின் ஜன்னல் கதவுகள் அடித்து நொறுக்கப்பட்டன என்பதும் இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் இரண்டு பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம், கொல்லம் மார்தோமா கல்வி நிலைய துணை முதல்வர் பிரிஜி சூரியன், தேர்வு மைய கண்காணிப்பாளர் ஷம்நாத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.