1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (13:07 IST)

சிங்கத்தை போட்டோ எடுக்க முயற்சி..? கூண்டுக்குள் குதித்தவரை குதறி தள்ளிய சிங்கம்! – திருப்பதியில் அதிர்ச்சி!

lion
சிங்கத்தை போட்டோ எடுப்பதற்காக பாதுகாப்பு கூண்டை தாண்டி குதித்த நபரை சிங்கம் அடித்துக் கொன்ற சம்பவம் திருப்பதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற பக்தி ஸ்தலமான திருப்பதியின் மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சிங்கம், புலி, மான் வகைகள் என பல காட்டு மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் திருப்பதி வந்து செல்லும் பக்தர்கள் பலரும் இந்த பூங்காவையும் பார்வையிட்டு செல்கின்றனர்.

அவ்வாறாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பூங்காவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு இளைஞர் சிங்கங்கள் உலாவும் பகுதிக்குள் தடுப்புகளை தாண்டி குதித்துள்ளார். அப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த ஆண் சிங்கம் ஒன்று அந்த இளைஞரை துரத்தி சென்று தாக்கி கடித்து குதறியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கூட்டலிடவே அங்கு விரைந்த பூங்கா அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சிங்கத்தை அங்கிருந்து கூண்டுக்குள் அனுப்பி இளைஞரின் உடலை கைப்பற்றினர். சிங்கத்தின் மூர்க்கமான தாக்குதலால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.


விசாரணையில் அந்த இளைஞர் மகாராஷ்டிராவை சேர்ந்த பிரகலாத குப்தா என தெரிய வந்துள்ளது. அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கத்தை போட்டோ எடுப்பதற்காக இளைஞர் உள்ளே குதித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K