வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (11:55 IST)

திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.100 கோடி அபேஸ்.! மலக்குடலில் திருடிய தமிழர் கைது..!!

ezumalaiyan
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையில் வெளிநாட்டு கரன்சிகளை திருடிய தமிழகத்தை சேர்ந்தவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான  பக்தர்கள் வந்து செல்கின்றனர்.    பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மட்டும் தினமும் கோடிக்கணக்கில் வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஒருவர் ரூ.100 கோடி அளவிற்கு மோசடி செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
 
தமிழகத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை செய்து வந்தார்.  அவரை சுமார் 20 ஆண்டுகளாக காணிக்கை பணம் கணக்கிடும் ஊழியர்களில் ஒருவராக தேவஸ்தான நிர்வாகம் நியமித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காணிக்கை பணம் எண்ணும் பகுதியில் இருந்து வெளியே வந்தபோது அவரின் நடவடிக்கையை கண்காணித்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.   
 
அப்போது அவர் தன்னுடைய மலக்குடலில் அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். விசாரணையில், பல ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் வெளிநாட்டு கரன்சிகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.  
 
அந்த பணத்தை பயன்படுத்தி சுமார் ரூ.100 கோடி அளவிற்கு தங்க நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு என பல சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பக்தர்களின் நம்பிக்கை கெட்டுவிடும் என்பதால், தேவஸ்தானம், லோக் அதாலத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றது.

அப்போது, திருடிய காணிக்கை பணத்தை கொண்டு வாங்கிய சொத்துகளின் ஒரு பகுதியை ரவிக்குமார், தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் எழுதி வாங்கியுள்ளனர். இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வளவு நாட்கள் வெளியே தெரியாமல் இருந்த இந்த விவகாரம் பற்றி ஆந்திர மேல்சபை உறுப்பினர் ஒருவர், மாநில அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் புகார் அளித்திருந்தார்.


இதையடுத்து இந்த முறைகேடு குறித்து ஆந்திர சட்ட மேல்சபையில்  அமைச்சர்  பேசியதை தொடர்ந்து, தற்போது இந்த சம்பவம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.