வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (16:43 IST)

வெளி உணவுகள், தண்ணீர் கொண்டு வந்தால் திரையரங்குகள் தடுக்கலாம்?! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

வெளி உணவுகளை திரையரங்கிற்குள் கொண்டு செல்வது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாடு முழுவதும் திரையரங்குகள் பல செயல்பட்டு வரும் நிலையில் திரையரங்குகளுக்குள் வெளி உணவுகள், தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்ல பல திரையரங்குகள் அனுமதிப்பதில்லை. கடந்த 2018ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது படத்திற்கு வருபவர்கள் உணவு பொருட்கள் எடுத்து வருவதை திரையரங்குகள் தடுக்க அதிகாரம் இல்லை என தெரிவித்திருந்தது.

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திரையரங்குகள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.


அதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் “சினிமா திரையரங்கம் என்பது தனியாருக்கு சொந்தமானது. திரையரங்கிற்குள் உணவு, குளிர்பானங்கள் விற்பது குறித்து அவரே முடிவு செய்ய முடியும். திரையரங்கிற்குள் விற்கும் உணவு பொருட்களை வாங்கியே ஆக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. எனவே வெளி உணவுகளை எடுத்து செல்ல திரையரங்குகள் தடை விதிக்க அவற்றிற்கு உரிமை உண்டு” என்று தீர்ப்பளித்துள்ளது.

அதேசமயம், அனைத்து திரையரங்குகளிலும் மக்களுக்கு சுகாதாரமான நல்ல குடி தண்ணீர் குடிப்பதற்கு விலையின்றி வழங்கப்படுதல் வேண்டும் என்றும், குறிப்பிட்ட சில குழந்தை உணவுகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்காக கொண்டு வரும் பட்சத்தில் அதை அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Edit By Prasanth.K