1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (14:55 IST)

டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமர்.! இனிமேல் வாரிசு அரசியலுக்கு இடமில்லை..! அமித்ஷா

Amitsha
காங்கிரஸ் மற்றும் இண்டியா  கூட்டணி கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தின் ஆன்மாவை அழித்து வருகின்றன என்றும் ஊழல், வாரிசு அரசியலை ஒழித்து நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் பாஜகவின் இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
 
கூட்டத்தில் பேசிய அமித்ஷா, மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர், அதில், எந்தவித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார்.
 
பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில்தான் ஒட்டு மொத்த வளர்ச்சி, ஒவ்வொரு துறையின் வளர்ச்சி, தனி நபர் மேம்பாடு ஆகியவை நடந்தன என எந்தவித குழப்பமும் இல்லாமல் சொல்ல முடியும் என்று அவர் கூறினார்.
 
மோடியின் 3வது ஆட்சியில், பயங்கரவாதம், பிரிவினைவாதம், நக்சலைட் ஆகிய பிரச்னைகளில் இருந்து நாடு விடுதலை பெற்று, அமைதியான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்பதை நோக்கி நகரும் என்று அமித்ஷா குறிப்பிட்டார்.

ஊழல் மற்றும் சமரச அரசியலுக்கு பெயர் போன குடும்பத்தினர் நடத்தும் கட்சிகளை காங்கிரஸ் வழிநடத்துகிறது என்றும் சமரச அரசியல், ஊழல், ஜாதி மற்றும் வாரிசு அரசியல் ஆகியவற்றை ஒழித்து நாட்டை வளர்ச்சி பாதைக்கு மோடி மாற்றினார் என்றும் இனிமேல், வாரிசு மற்றும் சமரச அரசியலுக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
காங்கிரஸ் மற்றும் ‛ இண்டியா ' கூட்டணி கட்சிகள், நாட்டின் ஜனநாயகத்தின் ஆன்மாவை அழித்து வருகின்றன என குறிப்பிட்ட அமித்ஷா,  அவர்கள், நாட்டின் ஜனநாயகத்தை ஊழல், வாரிசு அரசியல், சமரச அரசியல், ஜாதி என்ற வர்ணத்தை தீட்டினர் எனவும்
இதனால் தான் கடவுள் ராமரையும் ஏற்காத அந்தக்கட்சி கும்பாபிஷேகத்திலும் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
 
Modi
டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமர்:
 
7 தலைமுறையை சேர்ந்த குடும்ப கட்சிகளின் கூட்டணியே ‛ இண்டியா ' கூட்டணி என்றும் அரசியலில் அவர்களின் நோக்கம் என்ன? நாட்டை சுயசார்பு நாடாக மாற்றுவதே பிரதமரின் குறிக்கோள் என்றும் அமித்ஷா கூறினார். 
 
ஏழைகள், நாட்டின் வளர்ச்சி பற்றி மோடி சிந்திக்கிறார். ஆனால், ராகுலை பிரதமர் ஆக்குவதே சோனியாவின் குறிக்கோள். பவார் தனது மகளையும், மம்தா தனது உறவினரையும், ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே தங்களது மகன்களையும் முதல்வர் பதவியில் அமர்த்துவதை லட்சியமாக கொண்டுள்ளனர் என்றும் முலாயம் தனது மகனை முதல்வர் பதவியில் அமர வைத்துவிட்டார் என்றும் அமித்ஷா விமர்சித்தார்.
 
குடும்பத்திற்காக அதிகாரத்தை பெற விரும்புபவர்கள், ஏழைகளின் நலனை பற்றி சிந்திப்பார்களா? என கேள்வி எழுப்பிய அவர்,  சொந்த கட்சியில் ஜனநாயகத்தை பாதுகாக்காதவர்கள் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது என கூறினார்.

 
லாலு முதல் சோரன் வரை, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் ஊழலில் திளைத்தனர் என்று குற்றம் சாட்டி அமித்ஷா,  பாஜகவில்  குடும்ப அரசியல் இருந்திருந்தால், டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்திருக்க முடியாது என்று கூறினார்.